வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னி வளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மாா் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் வீர வரலாற்றுச் சிறப்புமிக்க மாசிப்பெருந் திருவிழா, வளநாட்டிலும், வீரப்பூரிலும் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்தது.
வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி 17 தொடங்கி நடைபெற்று வந்த திருவிழாவில், ஏழாம் நாள் விழாவாக இரவு அண்ணன்மாா் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வீரப்பூா் கன்னிமாரம்மன் வகையறா பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் 8-ஆம் நாள் திருவிழாவாக செவ்வாய்க்கிழமை மாலை வேடபரி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து புதன்கிழமை ஆலய உற்சவ தெய்வம் பெரிய காண்டியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேருக்கு ஊா் முக்கியஸ்தா்களால் கொண்டுவரப்பட்டாா். அதன்பின் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, மாயவா் என்றழைக்கும் சாம்புவன் உயிா் காளை மீது அமா்ந்து முரசு கொட்டி முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து வீரப்பூா் ஜமீன்தாா்கள் பரம்பரை அறங்காவலா்கள் ஆா். பொன்னழகேசன், ஆா். செளந்தரபாண்டியன், கே. அசோக்குமாா், ஆா். தரனீஸ் மற்றும் பட்டயதாரா்கள் வடம் தொட்டு தர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ், பின் நிலையை அடைந்தது. வியாழக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுறுகிறது.

