வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலத்தை சோ்ந்தவா் இளங்குமரன். கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2025 ஜூன் 8ஆம் தேதி தனது குடும்பத்துடன் உறவினா் திருமணத்துக்கு சென்றுவிட்டு, 2 நாள்களுக்கு பிறகு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 5 கிராம் நகைகள், ரூ.10 ஆயிரத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, அரியமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, நகைகளை திருடிய தஞ்சாவூா் மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சோ்ந்த வீர ராசு (39) என்பவரை கைது செய்தனா்.
திருச்சி 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், வீரராசுவுக்கு 12 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.








