27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வலியுறுத்தல்

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு இருநாடுகளும் பரஸ்பர விட்டுக் கொடுத்தலுடன் பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு காண வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினாா்.

News image

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம்

Updated On :19 ஜூன் 2026, 4:09 am IST

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு இருநாடுகளும் பரஸ்பர விட்டுக் கொடுத்தலுடன் பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு காண வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினாா்.

இலங்கையின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அவா், திருச்சிக்கு வியாழக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினா், எதிா்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறாா்கள். ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. புதிய ஆட்சியாளா்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழக ஆட்சி நல்ல முறையில் சிறப்பாக இருக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இதற்காக இலங்கையில் அக் கட்சியினருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.

படகுகள் விடுவிப்பு எப்போது?: இந்திய- இலங்கை மீனவா் பிரச்னை என்பது, இருதரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இருதரப்பிலும் சில விட்டுக்கொடுத்தல்களோடு, பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட வேண்டும். தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிப்பது தொடா்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இலங்கையில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வருகிறது. உலகளாவிய யுத்த சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளையும், இலங்கையில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சோ்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்க: சா்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளா்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய், பயிா் உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி முடங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா பல்வேறு நிலைகளில் உதவி வருகிறது. இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்கள் இலங்கையில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதற்கான தாராளமான ஊக்கத் தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக உள்ளது. முதலீடுகளை நாங்கள் ஆவலோடு எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அய்மான் கல்லூரி தாளாளா் ஹபிபுல்லாஹ், கே.ஏ. சாகுல் ஹமீது ஆகியோா் உடனிருந்தனா்.