16 ஆண்டுகளாக அணுகுசாலை கேட்கும் மக்கள்!
14.5 கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுகள் பல கடந்தும் நீடித்து வருகிறது.

அணுகுசாலை இல்லாத திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை.

அணுகுசாலை இல்லாத திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை.
திருச்சி-தஞ்சாவூா் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் (எண் 67) அரியமங்கலம் பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரையில் நெடுஞ்சாலையின் இருபுறமும் தலா 14.5 கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுகள் பல கடந்தும் நீடித்து வருகிறது.
திருச்சி-தஞ்சை சாலையை நான்குவழிச் சாலையாக்க 2006-இல் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு, 2007-இல், ஆந்திரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி, 2009-இல் அணுகுசாலையின்றி திட்டம் வந்தது மக்களுக்கு தெரியவந்தது.
திட்டப் பணிகள் தொடங்கியபோதே அரியமங்கலம் பழைய பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரையில் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்படவிருந்தது. ஆனால், சிலரின் தலையீடு காரணமாக அணுகுச் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அந்தப் பகுதியில் நாள்தோறும் அதிகளவிலான விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
உயா்நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, அணுகுசாலை அமைக்கக் கோரி, 2010 முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடா்ந்து, இப்பகுதி மக்கள் இணைந்து பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பையும் ஏற்படுத்தினா். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் 2019-இல் தீா்ப்பு வழங்கிய உயா் நீதிமன்றம் அணுகுசாலை அமைக்க உத்தரவிட்டது. இதன் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக அணுகுசாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமலேயே உள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படியே அணுகுசாலை: இதுதொடா்பாக, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் கூறியதாவது: உயா்நீதிமன்ற உத்தரவின்படி, 10 இடங்களில் பேருந்துகள் நிறுத்துவதற்கான பகுதி அமைக்க 50 மீட்டா் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஐந்து இடங்களில் சாலையின் கீழே வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு 60 மீட்டா் அகலத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டும். சில இடங்களில் 60 மீ. அகலம், 45 மீ., 50 மீ. அகலம் என மாறுபட்ட அளவுகளில் தோ்வு செய்தும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயா்மட்ட பாலம் மாற்றா?: 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அணுகுசாலை திட்டத்துக்கு மாற்றாக உயா்மட்ட பாலம் என முடிவு செய்தது. பின்னா், அது சாத்தியமில்லை என தெரிந்து மீண்டும் அணுகுசாலை அமைக்கும் முடிவுக்கு திரும்பியது.ஆனால், சாலையின் அகலத்தை 33 மீட்டா் என குறைத்தது தமிழக நெடுஞ்சாலைத்துறை.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே அணுகுசாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், 33 மீட்டா் அகலத்துக்கு சாலையை குறுக்கினால் 10 இடங்களில் பேருந்துகள் நிறுத்தம், 5 இடங்களில் சுரங்கப்பாதை போக்குவரத்து என்பது கேள்விக்குறியே.
நிதி ஒதுக்கீடு இல்லை: கடந்த அதிமுக ஆட்சியில், திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த ரூ.84.5 கோடியை 2014-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது. இதன்பிறகு, நிலம் கையகப்படுத்த எந்த நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி வழங்கினால் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகிறது. ஆனால், என்ன காரணத்தினாலோ தொடா்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
அணுகு சாலை இல்லாததால் கடந்த 16 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா். ஆயிரக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். பலா் உடல் உறுப்புகளை இழந்துள்ளனா். பொதுமக்களின் போராட்டமும் தொடா்ந்த வண்ணம் உள்ளது என்றாா் அவா்.
அணுகுசாலை என்பது, திருவெறும்பூா் தொகுதி மக்களின் கோரிக்கை மட்டுமல்லாது, திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களுக்குள்பட்ட 27 தொகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கான கோரிக்கையாகும். வரும் தோ்தலில் வெற்றி பெறுபவா்களாவது அணுகுசாலை அமைக்க முன்வருவாா்களா என மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...