ஆரணி, செப். 10: ஆரணி நகரில் உள்ள வெங்கட்ராமன் பூங்கா பராமரிப்பில்லாமல் பூட்டப்பட்டு உள்ளது. இதனை நகராட்சி சீர்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பு.
இப்பூங்கா 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கப்பட்டது. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்த இப்பூங்கா நகர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருந்து வந்தது. தற்போது, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பூட்டப்பட்டுள்ளது.
பட்டுக்கும், அரிசிக்கும் பெருமை சேர்க்கும் ஆரணி வருவாய் ஈட்டும் நகராட்சியாகவும் உள்ளது. ஆனால், சீரமைக்கப்படாமல் உள்ளது வேதனையைத் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.
சமூக விரோதிகளின் புகலிடம்
இங்கு சிறுவர்கள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல், அமர்ந்து பேசுவதற்கு சிமென்டால் ஆன சேர்கள், தொலைகாட்சி அறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. ஆனால், இவை சிதிலமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, பூங்கா முட்புதர்களால் சூழப்பட்டு, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
பூங்காவின் அருகேயுள்ள பள்ளி மாணவர்கள் இங்கு மதிய நேரங்களில் அமர்ந்து உணவு அருந்துவந்ததும், காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சியை பலர் மேற்கொண்டும் வந்திருந்தனர்.
நிதி ஒதுக்கியும் பயனில்லை?
இப்பூங்காவை மேம்படுத்த 1996ஆம் ஆண்டு ரூ.3.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், பணிகள் நடைபெற்றதாக சரிவர நடைபெறவில்லையென்றும் புகார்கள் உள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் கேட்டபோது, பூங்காவை சீரமைக்கத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.