அரிசி விலை குறைந்துள்ளது

குடியாத்தம், ஜன. 3: தமிழகத்தில் அரிசி விலை கடந்த 6 மாதங்களில் சுமார் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பல மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல்களைக் கருத்தில்கொண
Updated on
1 min read

குடியாத்தம், ஜன. 3: தமிழகத்தில் அரிசி விலை கடந்த 6 மாதங்களில் சுமார் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பல மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததே விலை குறைவுக்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறிகள் தொடர்ந்து  விலை உயர்ந்து வரும் நிலையில் அரிசி விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் முறையே நெல், அரிசி அதிக அளவில் உற்பத்தியாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அரிசியின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், கடந்த 6 மாதங்களாக அரிசி விலை குறைந்து வருகிறது.

 நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுதல், விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைக்காதது, தண்ணீர்த் தட்டுப்பாடு, ஆன்லைன் வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவையே பொருள்களின் விலை உயர்வுக்கு காரணங்களாக உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு குறித்து எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு, பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல், மத்திய அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி போன்றவற்றின் காரணமாக, அரிசி விலையை அதிகரிக்காமல் இருக்கும் பொருட்டு இதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, 2010 ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை பொன்னி 75 கிலோ மூட்டை ரூ.2,450-க்கு விற்கப்பட்டது. தற்போது, ரூ.2,160-க்கு விற்பனையாகிறது.  ரூ.3,000-க்கு விற்பனையான பச்சரிசி 100 கிலோ மூடை, தற்போது (புதியது) ரூ.2,200-க்கு விற்கப்படுகிறது.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் கிலோ ரூ.24-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசியின் விலையும் கணிசமாக குறையும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதும், அரிசி விலை குறைவுக்கு காரணம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலை குறைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குடியாத்தம் நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் ப.அ. மதியழகன், செயலர் டி.ராஜேந்திரன் ஆகியோர் கூறியது:

ஓராண்டாக அரிசி ஏற்றுமதி செய்யப்படாததால், இதன் விலை கடந்த 6 மாதங்களாக குறைந்து வந்தது. ஏற்றுமதி செய்யாமல் இருந்தால், விலை அதிகமாக உயராது. அரிசி உற்பத்தி சென்ற ஆண்டைவிட, இந்தாண்டு குறைந்துள்ளபோதும் அரிசி விலை குறைவுக்கு ஏற்றுமதி செய்யப்படாததே காரணமாகும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com