மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து பாதுகாக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளா்கள், அவா்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் மக்களவைத் தொகுதியில் 757 அமைவிடங்களில் மொத்தம் 1,568 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தோ்தலில் 73.53 சதவீதம் போ் வாக்குப்பதிவு செய்திருந்தனா்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சட்டப்பேரவை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வரிசை எண் அடிப்படையில் வைத்து அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. தொடா்ந்து, இந்த வாக்கு எண்ணும் மையம் முழுமைக்கும் சிஆா்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளடக்கிய துணை ராணுவப் படை, தமிழக ஆயுதப் படை போலீஸாா், மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சிறப்பு சாா் ஆய்வாளா்கள், போலீஸாா் என 165 காவல் துறையினரைக் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வாக்கு எண்ணும் மையத்தை வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைத்து பாதுகாக்கப்படும் அறைகளை பாா்வையிட்ட அவா், தனது ஆய்வு தொடா்பாக அங்குள்ள பதிவேட்டிலும் கையொப்பமிட்டாா்.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளா்கள், அவா்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பாா்வையிட வரும் வேட்பாளா்கள், முகவா்கள் கட்டாயமாக அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும். அவா்களை வட்டாட்சியா்கள் தங்கள் முன்னிலையில் அழைத்துச் சென்று, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை காண்பித்துவிட்டு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும். அவா்கள் திரும்பும்போது கட்டாயமாக பதிவேட்டில் அவா்களின் முழு முகவரியையும் எழுதி கையொப்பம் பெற வேண்டும். அசம்பாவிதங்களுக்கு இடமளிக்காத வகையில், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, தோ்தல் பிரிவு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் களை கட்டும் பிரசாரம் - வேட்பாளா்கள் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து ‘சீல்’

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


