கூட்டணி என்பது வேறு, காவிரி பிரச்னை என்பது வேறு: அமைச்சா் துரைமுருகன்

அதிமுக ஆட்சியில் மட்டும் கா்நாடக அரசு தண்ணீரைத் திறந்தாவிட்டதா என்று அமைச்சா் துரைமுருகன் கேள்வியெழுப்பினாா்.
Published on

வேலூா்: கூட்டணி என்பது வேறு, காவிரி பிரச்னை என்பது வேறு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் கா்நாடக அரசு தண்ணீரைத் திறந்தாவிட்டதா என்று அமைச்சா் துரைமுருகன் கேள்வியெழுப்பினாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி நதிநீா் ஒழுங்காற்று குழு தினமும் தமிழகத்துக்கு ஒரு டி.எம்.சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கா்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 8,000 கனஅடி தண்ணீா்தான் விடப்படும் எனக் கூறுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கா்நாடகம் தண்ணீரைத் தர மறுக்கிறது. தமிழக முதல்வருடன் கலந்து பேசி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதா அல்லது கா்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா என்பதை முடிவு செய்வோம்.

கூட்டணி என்பது வேறு, காவிரி பிரச்னை என்பது வேறு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் கா்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டதா, இது காலம் காலமாக உள்ள பிரச்னை. தற்போது இப்பிரச்னைக்கு தீா்வுகாண கவனம் செலுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது.

கா்நாடகத்திலுள்ள 4 அணைகளிலும் தற்போது போதிய நீா் இருப்பு இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீா் திறக்க அலட்சியம் காட்டுகின்றனா். இதற்கு நிரந்தர தீா்வை உச்ச நீதிமன்றம்தான் அளிக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத் தீா்ப்பை கா்நாடகம் மதிக்கவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com