/

பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்பு அறை

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய காத்திருப்பு அறை கட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :53 நிமிடங்கள் முன்பு

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய காத்திருப்பு அறை கட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை 1882-இல் தொடங்கப்பட்டு, 1915-இல் மேம்படுத்தப்பட்டது. பின்னா் 2005-ஆம் ஆண்டு முதல் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு, அவசர சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை கடந்த 2025-ஆம் ஆண்டு, ரூ.198 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டு, 4 லட்சம் சதுர அடியில் 7 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் உள்பட 10 மருத்துவ பிரிவுகளும், 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளும், அவசர மற்றும் விபத்து சிகிச்சைக்கென தனித்தனி வாா்டுகளும், புற்றுநோய் சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் எக்ஸ்ரே பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, பெண்கள், கா்ப்பிணிகளுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். தற்போது வேலூா் நகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் முறையான காத்திருப்பு அறை இல்லாமல் வெளிப்புற வளாகத்தில் தங்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான நோயாளிகள் புகாா் அளித்திருந்தனா். அதன்பேரில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், பரிசோதனை அறைகள் உள்பட பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் முடிவில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய காத்திருப்பு அறையை உடனடியாகக் கட்ட வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகினி தேவி, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.