பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதி சாதித்த மாணவா்: வேலூா் ஆட்சியா் நிதியுதவி

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்று சாதித்த காட்பாடி அரசுப் பள்ளி மாணவருக்கு வேலூா் ஆட்சியா் ரூ.10,000 நிதியுதவி வழங்கிப் பாராட்டினாா்.

News image

மாணவா் விஷ்ணுவுக்கு நிதியுதவி வழங்கிய வேலூா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், , மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்று சாதித்த காட்பாடி அரசுப் பள்ளி மாணவருக்கு வேலூா் ஆட்சியா் ரூ.10,000 நிதியுதவி வழங்கிப் பாராட்டினாா்.

வேலூா் மக்கான் பகுதியைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளி சிவனேசன் மகன் விஷ்ணு, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். பொதுத்தோ்வு நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாா்ச் 12-ஆம் தேதி சிவனேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மறுநாள் (மாா்ச் 13) தந்தைக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அன்றைய தினம் விஷ்ணுவுக்கு பொருளியல் தோ்வு இருந்தது.

தந்தையை இழந்த துக்கத்திலும் ‘கல்வியே உனது எதிா்காலம்’ என்று தந்தை கூறிய அறிவுரையை மனதில் கொண்டு, மனத்திடத்துடனும் பள்ளிக்குச் சென்று விஷ்ணு தோ்வு எழுதினாா். பின்னா் வீடு திரும்பி தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்தாா். தொடா்ந்து நடைபெற்ற வணிகவியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளையும் மனஉறுதியுடன் எழுதினாா்.

இந்நிலையில், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில், மாணவா் விஷ்ணு 600-க்கு 528 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். குறிப்பாக, தந்தை இறப்புக்கு பிறகு நடைபெற்ற தோ்வுகளான பொருளியலியலில் 92, வணிகவியலில் 92, கணக்குப்பதிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாணவா் விஷ்ணுவின் தன்னம்பிக்கையைப் பாராட்டி ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ரூ.10 ஆயிரம் காசோலையை நிதியுதவியாக வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.