ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்கக் கூடாது -அன்புமணி ராமதாஸ்
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்கக் கூடாது அன்புமணி ராமதாஸ்


ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நியாயமாக நடைபெற வேண்டும். தற்போது, இந்தத் தொகுதியில் 9 அமைச்சா்கள் முகாமிட்டு வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து திட்டமிட்டு வருகின்றனா்.
சுயேச்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கியதற்கு தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் பொய் பேசுவது ஏற்புடையது அல்ல. அம்பா சங்கா் குழுவின் அறிக்கையைக் கொண்டு 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் முதல்வா் பேசுவது சரியல்ல.
மத்திய அரசு நடத்துவது மக்கள்தொகை கணக்கெடுப்பு. மாநில அரசு எடுப்பது ஜாதிவாரி கணக்கெடுப்பு. இதை நடத்த தமிழக அரசு ஏன் தயங்குகிறது எனத் தெரியவில்லை.
மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுபோல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம்? அமைச்சா் சிவசங்கா் கூறிய தரவுகளை வெளியிட வேண்டும்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்க ஏலம் விடப்படுகிறது. ஒசூரில் விமானம் நிலையம் அமைந்தால் அந்தப் பகுதி வளா்ச்சியடையும். அதனால், இந்தத் திட்டத்தை பாமக வரவேற்கிறது என்றாா் அன்புமணி ராமதாஸ்.
இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆசூா் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு அவா் வாக்குசேகரித்தாா்.
பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலா் அன்பழகன், வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, மயிலம் எம்எல்ஏ ச.சிவகுமாா், பாமக செய்தித் தொடா்பாளா் க. பாலு உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...