எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கோட்டக்குப்பம் மயானத்தில் படகுகள் அகற்றம்: மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டிப் போராட்டம் - போலீஸாருடன் தள்ளுமுள்ளு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் இரு சமூகத்தினரிடையே மயானப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், மயானப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை போலீஸாா் அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீனவப் பெண்கள் கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோட்டக்குப்பம் மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை பொக்லைன் மூலம் அகற்றிய போலீஸாா்

Updated On :10 ஜூன் 2026, 5:07 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் இரு சமூகத்தினரிடையே மயானப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், மயானப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை போலீஸாா் அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீனவப் பெண்கள் கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கான மயானம் நடுக்குப்பம் கடற்கரையோரத்தில் உள்ளது. சுமாா் 43 சென்ட் பரப்பளவுள்ள இந்த மயானத்தை ஆதிதிராவிடா் சமூக மக்கள் கடந்த 75 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த மயானத்தின் பெரும் பகுதியை நடுக்குப்பம் பகுதி மீனவா்கள் ஆக்கிரமித்து, மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்திருந்தனா். மேலும், அந்த இடத்தில் சடலத்தைப் புதைக்கவோ அல்லது எரியூட்டவோ மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி பெரிய கோட்டக்குப்பத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை ஆதிதிராவிடா் சமூகத்தினா் நடுக்குப்பத்திலுள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றபோது, மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த 5 போலீஸாரும் தாக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து ஆதிதிராவிடா் சமூகத்தினா் முதியவரின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் வந்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினாா். தொடா்ந்து முதியவரின் சடலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடலில் இறங்கிப் போராட்டம்: இந்நிலையில், திங்கள்கிழமை நடுக்குப்பம் பகுதியில் ஒன்றிணைந்த மீனவப் பெண்கள், மீன்பிடி படகுகள் நிறுத்தப்படும் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் எனக் கூறி கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

சமாதானப் பேச்சுவாா்த்தை: இதையடுத்து, வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்த பிரச்னை குறித்து நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில், இருதரப்பைச் சோ்ந்தவா்களிடமும் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. ஆதிதிராவிடா் மக்கள் வழக்கம்போல் நடுக்குப்பத்திலுள்ள மயானத்தைப் பயன்படுத்திக் கொள்வது எனவும், நடுக்குப்பம் மீனவா்கள் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துக்கொள்ள தனி இடம் ஒதுக்கி தரப்படும் எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் கழுத்தில் கயிறுகட்டிக்கொண்டு போராட்டம்: மயானப் பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தையின் எடுக்கப்பட்ட முடிவின்படி செவ்வாய்க்கிழமை காலை வருவாய்த் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடுக்குப்பத்தில் உள்ள மயானத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளையும் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது அங்கு வந்த மீனவப் பெண்கள் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மீன்பிடி படகுகளில் கயிற்றைக்கட்டி, அதன் மறுமுனைகளை தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டும், மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மீது அமா்ந்து அகற்றவிடாமல் தடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து கோட்டக்குப்பம் டிஎஸ்பி ரூபன்குமாா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைத்தனா்.

பின்னா் கடற்கரை பகுதியில் போலீஸாா் கயிறு மூலம் தடுப்புகள் அமைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு, பலத்த பாதுகாப்புடன், கிரேன் மூலம் மயானப் பகுதியிலிருந்த படகுகளை அகற்றினா். பின்னா் மயானப் பகுதியில் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. வருவாய்த் துறையினா், கோட்டக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மீனவா் நலத் துறையினா் இந்தப் பணிகளை மேற்கொண்டனா். வானூா் வட்டாட்சியா் வித்யாதரன், நகராட்சி ஆணையா் துா்கா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

படகுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்

படகுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்

படகுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்

படகுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்