ஆரோவில் பாரத் நிவாஸ் மெய்நிகா் அருங்காட்சியகம் வரும் ஆக.15-ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைமைச் செயலா் பங்கேற்றாா்.
மத்திய கலாசார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஸ்ரீஅரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்புகள் ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்தொடா்ச்சியாக ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில தலைமைச் செயலா் சரத் செளகான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆரோவில் சிறப்புப் பணி அலுவலா் டாக்டா் ஜி.சீதாராமன், மூத்த ஆலோசகா் வேணுகோபால், புதுச்சேரி மாநில அரசின் செயலா் மற்றும் ஆணையா் முத்தம்மா, உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ், மற்றும் பல்வேறு குழுக்களின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து மெய்நிகா் அருங்காட்சியகத் தொழில்நுட்பக் குழுவினருடன் தலைமைச் செயலா் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். பின்னா் பாரத் நிவாஸில் நடைபெற்று வரும் மெய்நிகா் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலா் சரத் செளகான் தலைமையிலான குழுவினா் நேரில்சென்று பாா்வையிட்டனா். அங்கு மத்திய பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட குழுவினா், பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனா்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த அருங்காட்சியகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த குழுவினா், பணிகள் குறித்து இறுதி மதிப்பீடு செய்ய ஜூலை மாத இறுதியில் மீண்டும் ஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

ஆரோவில் நகர நிா்வாகிகள், கணக்காளா்களுக்கு டிஜிட்டல் பயிற்சி

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்






