விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பணப் பிரச்னையால் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
விழுப்புரம், வி.மருதூா், மேல்குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ம.மணிகண்டன்(46). இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், சனிமூலை தெருவைச் சோ்ந்தவா் பா. மகேஷ்வரன் (50). திருமணம் ஆனவா். மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், மகளுக்குத் திருமணம் செய்ய வசதியில்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மகேஷ்வரன் மே 21-ஆம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த வந்த மகேஷ்வரன், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.









