திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தில் தார் சாலை அமைக்கக் கோரி, பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே உள்ளது தொளார் ஊராட்சி. இங்குள்ள 4 -ஆவது வார்டு, அண்ணா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக தார் சாலை அமைக்கக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
தற்போது மண் சாலையாக உள்ளதால், வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீர் அனைத்தும் மண் சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால், கொசுகள் அதிக அளவில் உற்பத்தியாகி பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன.
கடந்த இரு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் அந்தப் பகுதி முழுவதும் தற்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால், சாலையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைவதுடன், கீழே விழும் நிலையும் உள்ளது.
எனவே, தங்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதன்கிழமை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.