

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு, பகலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.60 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக குமராட்சியை அடுத்த திருநாரையூர் கிராமத்தில் ஐந்து கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இவற்றில் செல்வி என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் செல்வி, அவரது மகன் தமிழ் ஆகியோர் காயமடைந்தனர்.
இதே போல, சிறகிழந்தநல்லூரில் குமாரின் மனைவி செல்வி மற்றும் கோவிந்தசாமி, பிள்ளையார்தாங்கலில் ரவிக்குமார் ஆகியோரின் கூரை வீடுகளும், காட்டுமன்னார்கோவிலில் மகேந்திரன், அருள்ராஜ் ஆகியோரின் ஓட்டு வீடுகளும் மழையால் சேதமடைந்தன.
தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை காட்டுமன்னார்கோவில் முதன்மைத் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததால் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
மேலும், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் திருநாரையூர், எடையார், கீழபருத்திகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.