திட்டக்குடி அருகேயுள்ள ம.பொடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திட்டக்குடியை அடுத்துள்ள ம.பொடையூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ம.பொடையூர், வினாயகநந்தல், கச்சிமைலுர், மலையனூர், புதூர் உள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கழிப்பறை, நூலகம், கணினி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லையாம்.
மாணவர்களுக்கான கழிப்பறை இருந்தும் அதைச் சரியாகப் பராமரிக்காததால், இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையோரம் உள்ள கருவேலங்காட்டுக்குச் செல்கின்றனர்.
மேலும், போதுமான கட்டட வசதி இல்லாததால், திறந்த வெளியில் மரத்தின் கீழ் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். வினாயகநந்தல், கச்சிமைலுர், மலையனூர், புதூர், உள்பட 10 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் அரசுப் பேருந்து பொடையூர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுவதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு நடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் பள்ளியின் மீது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.