கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை பெய்து வருவதைத் தொடர்ந்து மழைக் கால நோய்களான டெங்கு, பன்றிக் காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வரை டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் ரத்த மாதிரிகளை எலிசா பரிசோதனை மூலமாக சோதித்ததில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையின் டெங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
மாவட்டத்தில் ஏற்கெனவே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக 8 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக சென்னை, புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மேலும், காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்கள் சுமார் 100 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில், வெளி நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் பொதுமக்களும் தங்களது வீடுகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, தேவையற்ற பொருள்களில் நல்ல தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, அதை அப்புறப்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





