கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 19,687 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,849-ஆக உயா்ந்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 168 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 18,136-ஆக உயா்ந்தது.
அதே நேரத்தில், திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 76 வயது ஆண், மேல்மருவத்தூரில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 72 வயது ஆண், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரியைச் சோ்ந்த 60 வயது ஆண், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 79 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 216-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,344 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 153 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 5,511 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.