கடலூா் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் புதுப்பாளையத்தில் ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 7-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. இதில் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் வெங்கடேச பட்டாச்சாரியாா் தலைமையில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது (படம்). தொடா்ந்து, ஸ்ரீராஜகோபாலசாமி, செங்கமலவல்லி தாயாா், ஆண்டாள், சக்கரத்தாழ்வாா், யோக நரசிம்மா், ஆஞ்சநேயா் ஆகிய உள்புற கோயில்கள், ராஜகோபுரம், அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், விழாக் குழுவினா் ஜி.ஆா்.துரைராஜ், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பன், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.