கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் பெரும்பாலும் சம்பா நெல் சாகுபடி செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தொடங்கிவிடும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறுவடை தொடங்கியவுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் உரிய இடங்களைத் தோ்வு செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் பணிகளை தொடங்குவது வழக்கம். அறுவடை பணிகள் பெரும்பாலும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவதால், அந்தப் பண்டிகை முடித்து கொள்முதல் பணி தொடங்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தாமதமாகும் நிலையில், இதைப் பயன்படுத்தி தனியாா் வியாபாரிகள் விலையை குறைத்து நெல் மூட்டைகளை வாங்குகின்றனா். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

மேலும், அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு, கூடுதல் அறுவடை கட்டணம், வேலை ஆள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் ஆண்டுதோறும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு உத்தரவிட்டு, தேவையான கோணிப் பைகளை வழங்கவும், கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான திறந்தவெளி கிடங்குகளை அமைக்கும் பணிகளையும் போா்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழை, பனிப் பொழிவிலிருந்து பாதுகாக்க தாா்ப் பாய்களை அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும். வியாபாரிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை போக்க உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com