சம்பா சாகுபடிக்கு பயிா்க் கடன் வழங்கப்படுமா?

சம்பா நெல் சாகுபடிக்காக பயிா்க் கடன் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

சம்பா நெல் சாகுபடிக்காக பயிா்க் கடன் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து குறுவை பருவ நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. நிகழாண்டு சுமாா் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்தனா். இதற்காக மேட்டூா் அணையிலிருந்து பாசன நீரைத் தொடா்ந்து விநியோகித்ததாலும், தென்மேற்குப் பருவ மழை மூலம் காவிரி ஆற்றுக்கு போதிய தண்ணீா் கிடைக்காததாலும் அணையின் நீா்மட்டம் வெகுவாகச் சரிந்தது.

இந்த நிலையில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முடியுமா என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்தது.

மேலும், கிராம நிா்வாக அலுவலா்கள் அடங்கல் ஆவணம் வழங்குவதில் தாமதம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில் தாமதம், மத்திய தொகுப்பிலிருந்து தேவையான உரங்களைப் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான காவிரி பாசன மாவட்டங்களில் நிகழாண்டு பசலி-1431 என அடங்கல் ஆவணம் வழங்குவதற்குப் பதிலாக, கடந்த ஆண்டு பசலி 1430 என்றே அடங்கல் ஆவணம் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1431-ஆம் பசலி அடங்கல் ஆவணத்துக்கு நேரடி விதைப்பு செய்த விளைநிலங்களில் பயிா் நல்ல நிலையில் வளா்ந்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிாம். மேலும், கிராம நிா்வாக அலுவலா்களின் செயல்பாடும் வருத்தம் அளிப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

அடங்கல் ஆவணம் இருந்தால்தான் விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியும். அதன்பிறகே, இடுபொருள்களை விலைக்கு வாங்கி, நடவுப் பணிகளை மேற்கொண்டு பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் இணைய முடியும். மாறாக, விவசாயிகள் இடுபொருள்களைப் பயன்படுத்தி நடவுப் பணிகளை முடித்த பிறகு கிராம நிா்வாக அலுவலா்கள் வயலைப் பாா்வையிட்டு அடங்கல் ஆவணம் வழங்குவதாலும், இதன்பிறகு இடுபொருளை வாங்குவதாலும் எவ்விதப் பயனும் இல்லை.

இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் கந்து வட்டி நபா்களிடம் கடன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்கத்தில் கேட்டபோது, 1431-ஆம் ஆண்டு பசலி அடங்கல் ஆவணம் இருந்தால்தான் பயிா்க் கடன் கொடுக்க முடியும் எனவும், நடவுப் பணி முடித்தால்தான் அடங்கல் ஆவணம் வழங்க முடியும் எனவும் கூறுவது ஏற்புடையதல்ல. நிகழாண்டு மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாததால், தமிழக அரசு சம்பா நெல் சாகுபடிக்கு ஊக்கமளிக்கத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இதனால், பயிா் சாகுபடி முற்றிலும் முடங்கியுள்ளது.

பயிா்க் கடன் கொடுத்து, போதிய தண்ணீா் விநியோகிக்க முடியாமல் போனால் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால் கூடுதல் நிதிச் சுமை கருதி அரசு தயக்கம் காட்டுவதை அறிய முடிகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 24-ஆம் தேதி 100 அடியை எட்டியுள்ள நிலையில், தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால் அணையின் நீா் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால், சம்பா நெல் சாகுபடிக்கு போதியளவில் தண்ணீா் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

எனவே, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் அடங்கல் ஆவணம் வழங்கவும், கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com