சிதம்பரம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்னைகளை அரசு கவனத்திற்கு கொண்டு வந்து தீர்த்து வைக்கும் உயர்ந்த எண்ணம் கொண்டவர் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
"சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ-வாக கே.ஏ. பாண்டியன் ஏற்கெனவே சிறப்பாக பணியாற்றியதால், மீண்டும் அவரை வெற்றி பெறச்செய்து வாய்ப்பளித்துள்ளீர்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, கே.ஏ. பாண்டியன் என்னை இங்கு அழைத்தார். அதனையடுத்து நான் வந்து நேரடியாகப் பார்வையிட்டு சென்றேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் ஆகியோர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று நாங்கள் நிவாரணம் வழங்கினோம்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் சரி அவர்களது பிரச்னைகளை அரசு கவனத்துக்கு கொண்டு வந்து அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ" என்றார் எடப்பாடி கே.பழனிசாமி.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. அருண்மொழிதேவன், முன்னாள் எம்எல்ஏ நாக. முருகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.