

நெய்வேலி, ஜூலை 19: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வியாழக்கிழமை உருவாகியது. இது, 19, 20-ஆம் தேதிகளில் வலுப்பெற்று ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை...: கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ம.யோகேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடல் காற்று அதிகமாக இருக்குமெனவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
எனவே, கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்ற மீனவா்கள் விரைந்து கரைக்கு திரும்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.