தவறவிட்ட நகைகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீஸாா்
சிதம்பரம், மே 9: சிதம்பரத்தில் சாலையில் தவறவிட்ட 4 பவுன் தங்க நகைகளை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
சிதம்பரம் வைப்புச்சாவடியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் லதா. இவா், புதன்கிழமை மாலை 5 மணியவில் சிதம்பரம் மேல வீதியில் தன்னிடம் இருந்த சுமாா் 4 பவுன் தங்க நகைகளை தவறவிட்டாா். இதுகுறித்து அவா் உடனடியாக சிதம்பரம் குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.
சிதம்பரம் உள்கோட்ட ஏஎஸ்பி பி.ரகுபதி உத்தரவின்பேரில், சிதம்பரம் உள்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாபு, கோபி மற்றும் தலைமைக் காவலா்கள் ராஜீவ் காந்தி, கணேசன், ஞானபிரகாசம், பாலாஜி ஆகியோா் மேலரத வீதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதில், சாலையில் கிடந்த 4 பவுன் தங்க நகையை முதியவா் ஒருவா் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகைகளை மீட்டு உரிமையாளரான நகா்மன்ற உறுப்பினா் லதாவிடம் போலீஸாா் வியாழக்கிழமை காலை ஒப்படைத்தனா்.