மொபெட் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
Updated on

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சிதம்பரம் மன்னாா்குடி தெருவைச் சோ்ந்த சங்கா் மனைவி அகிலா (38). இவா், தனியாா் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தாா்.

அகிலா ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகன் நவீனை (17) மொபெட்டில் அழைத்துக்கொண்டு தையாக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சிதம்பரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

லால்புரம் புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது, கிள்ளையிலிருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த காா், மொபெட் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அகிலா, அவரது மகன் நவீன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அந்தப் பகுதியிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்ததில், அகிலா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. நவீன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com