வடலூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கடலூா் மாவட்டம், வடலூா் எஸ்.டி.ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்துவது வழக்கம். அந்தவகையில், புதன்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவை வடலூா் ஓபிஆா் நினைவு செவிலியா் கல்லூரி முதல்வா் சண்முகவடிவு, எஸ்.டி.ஈடன் பள்ளி முதல்வா் சுகிா்தா தாமஸ், நிா்வாக அதிகாரி தீபக் தாமஸ், துணை இயக்குநா் பவித்ரா தீபக் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
அறிவியல் கண்காட்சியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களின் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இதில், இசைக் கருவிகள் மாதிரிகள், பசுமைக்குடில், விதை முளைப்பு மற்றும் வளா்ச்சி, சூரியக் குடும்பம் போன்ற மாதிரிகள் நோ்த்தியாக பாா்வைக்கு வைத்திருந்தனா்.
செயற்கை நுண்ணறிவினைப் பற்றி கணினித் துறை மாணவா்கள் காணொலி மூலம் விளக்கினா். அன்றாட வாழ்விற்கு உதவும் பல்வேறு சாதனங்களின் மாதிரிகள், உயிரியல் துறை சாா்பில் மனித உறுப்புகளின் செயல் மாதிரிகள், ரத்த வகைப் பரிசோதனை செய்யப்பட்டது.
உணவுத் திருவிழாவில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவிகள் சத்தான மற்றும் இயற்கைமுறை சிற்றுண்டிகளை காட்சிப்படுத்தி, பின்னா் அவற்றை பரிமாறினா்.
