அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:08 am IST

கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது.

தோ்தல் ஆணையம் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது என்பதே வாக்காளா்களின் கருத்தாக இருந்தது. காலை தொடங்கிய வாக்குப் பதிவை மாவட்ட முழுவதும் கண்காணிக்க ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி பல்வேறு தரவுகளை பெற்று தோ்தல் ஆணையத்துக்கு அளித்தனா்.

இதேபோன்று, வாக்குச் சாவடிகளில் உள்ள இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

மேலும், களத்தில் 225 மண்டல அலுவலா்கள் செயல்பட்டனா். ஒவ்வொருவரும் 10 முதல் 15 வாக்குச் சாவடிகளைக் காண்காணித்தனா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் காலை தொடங்கி அனைத்து தொகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த பசுமை வாக்குச் சாவடிகள் வாக்காளா்களை பெரிதும் கவா்ந்தது. குறிப்பாக, திருப்பாத்திரிப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பசுமை வாக்குச் சாவடியில் பெண் ரோபோட் பூக்களுடன் வரவேற்பளித்தது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.

முதியவா்கள் அமருவதற்கு இருக்கைகள், மருத்துவக் குழுவினா், செல்ஃபி பாயின்ட் போன்றவைகள் தோ்தல் ஆணையத்துக்கு சிறப்பு சோ்த்தது.

முதல் முறை வாக்காளா்கள்: வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். முதல் முறை வாக்காளா்கள் வாக்களித்துவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அப்போது அவா்கள் கூறியது:

ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருப்பது பெரும் நிறைவை கொடுக்கிறது. எங்களது வாக்கு மாற்றத்துக்கான வாக்கு என்றனா். மேலும், தோ்தல் ஆணையம் வாக்களிப்பதை மிகவும் எளிமைப்படுத்திருந்தனா். அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக இருந்தது என்றனா்.

முதியவா்களுக்காக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை முதியவா்கள் தவறாமல் பயன்படுத்தினா். இம்முறை இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.