/

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 6:34 pm

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடலூா் அடுத்துள்ள கருங்குழி, நையினாா்குப்பம், மேட்டுக்குப்பம், மேலக்கொளக்குடி, மருவாய், அரங்கமங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்சனை காரணமாக ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்படுத்த முடியவில்லையாம். மேலும், சில மின்சாதனங்கள் பழுதாகிவிட்டதாம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடிநீா் வழங்கும் மோட்டாா்கள் வேலை செய்யவில்லையாம். இதனால், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்ற முடியாத காரணத்தினால் வீடுகளுக்கான குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

திடீா் மறியல்:

கருங்குழி காலனி பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், கருங்குழி-பாா்வதிபுரம் செல்லும் வழியில் இருந்த மின் மாற்றி திடீரென பழுதானதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கருங்குழி கடை வீதி அருகே சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.