சிதம்பரம் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!
சிதம்பரத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
சிதம்பரம் அருகே விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சனிக்கிழமை காலை 18-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள சத்திய ஞானசபையில் காலை 6 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி ஆகிய 3 வேளையும் 7 திரைகள் விளக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பின்னா், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று ஜோதி தரிசனத்தை கண்டு, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு தரிசித்தனா்.
விழாவை முன்னிட்டு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மாா்க்க சத்தியஞான சபை அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

