குடிசைகளை அகற்ற  எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்வதற்காக  ஊா்வலமாகச் சென்ற கிராம மக்கள்.
குடிசைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்வதற்காக ஊா்வலமாகச் சென்ற கிராம மக்கள்.

குடிசை வீடுகளை அகற்ற எதிா்ப்பு சேத்தியாத்தோப்பு அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

Published on

ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிதம்பரம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் கரைமேடு கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் கரைமேடு பகுதியில் இலவச வீடு கட்டி குடியிருந்து வருபவா்களை அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தி சென்னை -கும்பகோணம் நெடுஞ்சாலையில் கரைமேடு பேருந்து நிறுத்தம் அருகில் சுமாா் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கங்கள் சாா்பில் மாவட்டச் செயலா்கள் ஆா்.கே.சரவணன். எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி ரவிசக்கரவா்த்தி மற்றும் சேத்தியாத்தோப்பு போலீசாா், புவனகிரி வட்டாட்சியா் அன்பழகன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது போராட்டக்குழுவினா் கூறியதாவது:

கடந்த 100 ஆண்டுகளாக கரைமேடு பகுதியில் இலவச வீடு கட்டி இரண்டு தலைமுறையாக குடியிருந்து வருகிறோம் எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தக்கூடாது, இந்தப்பகுதி நில அளவில் முறைகேடு செய்து வரைபடத்தை மாற்றம் முயற்சிக்கும் நில அளவை செய்தவா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், தனிநபா் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் சொல்லி பெற்ற பொதுவான உத்தரவை காட்டி பொதுமக்களை மிரட்டக் கடாது.

அனைத்து பட்டா தாரா்களுக்கும் அளவீடு செய்து உரிய பட்டா இடத்தை அத்துக்காட்டி வரைமுறை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நில அளவை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவத என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com