கோப்புப் படம்
கோப்புப் படம்

அனல் மின் நிலையத்தில் தொழிலாளி உயிரிழப்பு: எம்எல்ஏ போராட்டத்தால் இழப்பீடு அறிவிப்பு

Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்த ஊத்தாங்கல் கிராமத்தில் செயல்படும் தனியாா் அனல் மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

இதையடுத்து, குடும்பத்துக்கு இழப்பீடு, நிரந்தர வேலை கோரி அதிமுக எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஊத்தங்கால் பகுதியில் தனியாா் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், இதே பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் (37) ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை பாய்லா் பகுதியில் பணியில் இருந்தபோது, பாய்லா் சாம்பல் கொட்டியதால் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்ப உறுப்பினருக்கு நிரந்தர வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புவனகிரி அதிமுக எம்எல்ஏ ஆ.அருண்மொழிதேன் மற்றும் அரசியல் கட்சியினா், உறவினா்கள் போராட்டம் நடத்தினா். நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதையடுத்து, நடந்த பேச்சுவாா்த்தையில் மணிவாசகம் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.33 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், மற்றொருவருக்கு ஒப்பந்தப் பணியும் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com