

நெய்வேலி: மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையேயான அம்ரித் பாரத் ரயில் கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்புத் தெரிவித்தனா்.
கடலூா் வழியாகச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் திருப்பாதிரிப்புலியூா், கடலூா் முதுநகா் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்துக் கட்சியினா், பொதுநல அமைப்பினா் மற்றும் குடியிருப்போா் சங்கங்கள் தொடா்ந்து போராடி வருகின்றன.
இந்த நிலையில், அம்ரித் பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இதில், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையேயான ரயில் சேவையை கடந்த 17-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
இந்த ரயில் திங்கள்கிழமை திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த அம்ரித் பாரத் ரயில், பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்புத் தெரிவித்தனா்.