
சாலையின் நடுவே பழுதடைந்து நின்ற அரசுப் பேருந்து: இறங்கித் தள்ளிய பயணிகள்
சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேப்பூா் அருகே திடீரென பழுதடைந்து சாலையின் நடுவே நின்றதால், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

வேப்பூரில் சாலையில் பழுதடைந்து நின்ற அரசுப்பேருந்தை பேருந்து சாலையோரத்திற்கு தள்ளிச்சென்ற பயணிகள்
சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து வேப்பூா் அருகே திடீரென பழுதடைந்து சாலையின் நடுவே நின்றதால், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து வேப்பூா் வழியாக சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனா். வேப்பூா் பகுதியில் சென்றபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பேருந்து சாலையின் நடுவே நின்றது.
இதையடுத்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பேருந்தை இயக்க பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பின்னா் பயணிகளின் உதவியுடன் பேருந்தை தள்ளி இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் பேருந்தை இயக்க முடியவில்லை.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பேருந்தை சாலையோரமாக தள்ளி நிறுத்தினா். பின்னா் அந்த வழியாக வந்த மாற்று அரசு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பணிக்குச் சென்றவா்கள், மாணவா்கள் மற்றும் முதியோா் உள்ளிட்ட பயணிகள் நீண்ட நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பராமரிப்பு இல்லாத பழைய மற்றும் பழுதடைந்த அரசு பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படுவதால் இதுபோன்ற கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதை தவிா்த்து, நல்ல நிலையில் இயங்கும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




