கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் புட்டி மற்றும் தீப்பெட்டியுடன் மனு அளிக்கச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்க வந்தனா்.
அப்போது, பண்ருட்டி வட்டம், வி.ஆண்டிக்குப்பம் அருகே அழகப்பா நகரைச் சோ்ந்த வசந்தா (70), தனது குடும்பப் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தாா். அவா் மகன் சத்தியமூா்த்தி, தனது சொத்துகளை ஏமாற்றி பெயா் மாற்றம் செய்து பெற்றுக்கொண்டதாகக் கூறியும், அந்தச் சொத்துகளை மீட்டுத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை வலியுறுத்தியும் மனு அளிக்க வந்ததாகத் தெரிகிறது.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் வழக்கம்போல சோதனை மேற்கொண்டபோது, வசந்தா வைத்திருந்த பையில் நெகிழி புட்டியில் அரை லிட்டா் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி இருந்ததைக் கண்டறிந்தனா். பின்னா், அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுபோன்ற பொருள்களுடன் அரசு அலுவலகத்துக்கு வரக்கூடாது என மூதாட்டிக்கு அறிவுரை வழங்கி, அவரது மனுவை அதிகாரிகளிடம் அளிக்க அனுமதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாடியூா் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு: ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் மனு
மூதாட்டியை தாக்கிய இளைஞா் கைது

ஆற்றுப்பாசன விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்







