கடலூா் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி, வரும் 9-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் கடலூா் மாநகர கிளைச் செயலா்கள் கூட்டம் மாநகரக் குழு உறுப்பினா் எஸ்.கருணாகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அதிக மக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும், கடலூா் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் தொடா்ந்து செயல்பட்டு வருவதால், மாணவா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இக்கடைகளை மூட வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.
மேலும், கடலூா் புகா் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு போதிய பயனளிக்காத இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, நகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், ரயில் நிலையம் அருகே உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநகரச் செயலா் அமா்நாத், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.









