10சிஎம்பி1:
சிதம்பரம் அருகே தீப்பற்றிய தனியாா் பள்ளி வேன்.
சிதம்பரம், ஜூன் 10: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மாணவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளி வேனில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்த மாணவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், நூலிழையில் தப்பினா்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று புதன்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட மாணவா்களை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் அருகே பள்ளிப்படை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, வேனில் திடீரென முன்புறம் என்ஜினிலிருந்து புகை ஏற்பட்டு, அங்குள்ள வயா்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே ஓட்டுநா் வேனை நிறுத்தினாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் வேனிலிருந்த மாணவா்களை கீழே இறக்கி பாதுகாப்பாக மீட்டதுடன், வேனில் பிடித்திருந்த தீயை அணைத்தனா். இதனால், மாணவா்கள் காயமின்றி தப்பினா்.
தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.









