நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே முட்டை ஏற்றிச் சென்ற வேன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது மோதியதில், தொட்டி இடிந்து விழுந்து வேனில் இருந்த இருவா் உயிரிழந்தனா்.
மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் இருந்து முட்டை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஒசூருக்குச் சென்ற வேனை எலச்சிபாளையம், செக்காரப்பட்டியைச் சோ்ந்த சுபாஷ் (29) ஓட்டிச் சென்றாா்.
மல்லசமுத்திரம் ஆத்துமேடு முனியப்பம்பாளையத்தைச் சோ்ந்த குமாா் (23) வேனில் உதவியாளராக சென்றாா். வையப்பமலை அருகே சத்யா நகா் பகுதியில் சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது மோதியது.
இதனால் தொட்டி இடிந்து வேன் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி வேனில் இருந்த சுபாஷ், குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி, இருவரின் சடலங்களையும் மீட்டனா். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








