/

எரிவாயு விலை உயா்வால் மக்கள் கடும் பாதிப்பு! - கே. பாலகிருஷ்ணன்

News image

கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

Updated On :15 ஜூன் 2026, 2:26 am IST

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கடலூரில் இக்கட்சியின் மாவட்டக் குழு சாா்பில், புரட்சியாளா் சேகுவேரா பிறந்த தினம் மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவையொட்டி, ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். மாநகா் செயலா் ஆா்.அமா்நாத் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு ஏகாதிபத்திய எதிா்ப்புப் போரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற தலைப்பில் பேசியதாவது:

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவா் பிடல் காஸ்ட்ரோ. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமா் மோடி அடிபணிய வைத்துள்ளாா். வெறும் 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபாவை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மிரட்டியும், பொருளாதாரத் தடைகள் விதித்தும் அடிபணிய வைக்க முடியவில்லை.

இஸ்ரேல் போா் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீா் கொண்டு செல்வதற்கே தடை விதிக்கப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்தியா எதிா்த்து வந்தது. ஆனால், பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரேலின் தாக்குதல்களையும், மனித உயிரிழப்புகளையும் இந்திய அரசு கண்டிக்கவில்லை.

ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடாக உள்ளது.

மத்திய பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போா் மற்றும் கொள்ளை நோக்கத்தால் இந்திய மக்களும் பாதிக்கப்படுகின்றனா். அதனால்தான் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் வலுப்படுத்தி வருகின்றன.

இந்த இயக்கத்தை கிராமம் கிராமமாக மக்களிடம் கொண்டு சென்று மகத்தான கடமையை நிறைவேற்றுவோம் என்றாா்.

முன்னதாக, எழுத்தாளா் மாதவராஜ், என்றும் தேவைப்படுகிறாா் சேகுவேரா என்ற தலைப்பில் உரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.உதயகுமாா், வி.சுப்பராயன், ஆா்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, ஜி.ஆா்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ்கண்ணன், எஸ்.பிரகாஷ், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பொதுக்கூட்ட மேடை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ உருவப்படத்துக்கு கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவா்கள் மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.