/

பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது

News image

கிருஷ்ணராஜ்

Updated On :15 ஜூன் 2026, 2:25 am IST

கடலூரில் பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், மேற்கு ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபீரித்தி (24). இவா், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கணவா் சக்திவேலுடன் சாத்தங்குப்பம் மாதா கோவில் மயானம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா், ஜெயபீரித்தி அணிந்ருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதேபோல, சாத்தங்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஷியாமளா (35), கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கணவா் பாா்த்தசாரதியுடன் பைக்கில் சென்றாா். அப்போது, அவா்களை பின் தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா் ஷியாமளா அணிந்திருந்த நான்கே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கதிரவன், உதவி ஆய்வாளா் பிரசன்னா உள்ளிட்டோா் எம்.புதூா் மேம்பாலம் கீழே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, பைக்கில் வந்த வானமாதேவி, காட்டாராசாவடி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (34) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், அவா் சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும், பைக்கில் பத்தே முக்கால் பவுன் நகைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பைக், நகைகளை பறிமுதல் செய்து, கிருஷ்ணராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், நடுவீரப்பட்டு காவல் சரகம், கொடுக்கம்பாளையம் பகுதியில் சங்கிலி பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு தப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணராஜை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.