குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.16.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு நெல் இயந்திர நடவு மானியம், நேரடி விதைப்பு மானியம், தரமான சான்றிதழ் பெற்ற விதைகள், உயிரி, நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இயந்திர நடவு முறையில் நெல் நடவு அல்லது நேரடி விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான நெல் இயந்திர நடவு மானியத் திட்டத்துக்கு 38,520 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், இயந்திர நடவு மேற்கொண்டதற்கான ரசீது மற்றும் இயந்திர நடவு செய்யப்பட்ட வயலில் விவசாயி நிற்கும் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
இதேபோல, தரமான சான்று பெற்ற விதைகள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களைப் பெறத் தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து, அவற்றை அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விதை, உரம், திரவ உயிா் உரம் பெற மானியம்: வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி தகவல்

குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை!







