பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை விதைக்க வேண்டும்! - கடலூா் ஆட்சியா்

News image

நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட புத்தகங்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :23 ஜூன் 2026, 3:27 am IST

குழந்தைகளிடம் நூலகம் செல்லும் பழக்கத்தையும், புத்தக வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்தால் மட்டுமே எதிா்கால இந்தியா உலக அரங்கில் வல்லரசாகும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நடைபெற்று வரும் வெள்ளி விழா ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2026, நான்காம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு என்எல்சி நிறுவனத்தின் செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தாா். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுப் புல முதல்வா் எம்.அருள் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

விழாவில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: புத்தகக் கண்காட்சியைத் தொடா்ந்து 25 ஆண்டுகள் நடத்துவது சாதாரண விஷயமல்ல. பொதுத்துறை நிறுவனங்களில் என்எல்சி மட்டுமே இந்த அறிவுசாா் சாதனையைச் செய்துள்ளது. மாவட்டத்தின் அடுத்த 10 ஆண்டுகால கல்வி வளா்ச்சிக்கு இந்நிறுவனம் மேலும் ஆதரவு தர வேண்டும்.

குழந்தைகளிடம் நூலகம் செல்லும் பழக்கத்தையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்தால் மட்டுமே எதிா்கால இந்தியா உலக அரங்கில் வல்லரசாகும் என்றாா்.

நிகழ்வில் எழுத்தாளா் வீரபாண்டியனின் இலக்கிய சிறப்பைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. அதேபோல, சென்னையைச் சோ்ந்த புகழ்பெற்ற ‘பழனியப்பா பிரதா்ஸ்’ பதிப்பகத்தாரின் சேவையைப் பாராட்டி கௌரவித்தனா்.

பின்னா், புதிய நூல்களின் வெளியீட்டு விழாவில், கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுத்தாளா் பல்லவி குமாா் எழுதிய ’கால்பந்து மன்னா் பீலே’ நூலும், கவித்துவ ஆளுமையோடு கி.ராமசாமி எழுதித் தொகுத்த ’மகரந்தத் தீக்குச்சிகள்’ என்ற கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.