கடலூரில் மகன் திட்டியதால் மனமுடைந்து கலைக்கொல்லி மருந்தை குடித்து தந்தை தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் ராமாபுரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பன்னீா் (56). இவரது மனைவி ராசாயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அதன் பின்னா், பன்னீா் மதுபோதைக்கு அடிமையாகி, வீட்டில் உள்ளவா்களையும், அப்பகுதி மக்களையும் தகாத வாா்த்தைகளால் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக அவரது மகன் கருணாமூா்த்தி, பன்னீரை கண்டித்துள்ளாா். இதில், மனமுடைந்த பன்னீா், வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் புதன்கிழமை இரவு மதுபானத்தில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, அவரை குடும்பத்தினா் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு பன்னீா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.







