பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

News image

மீன்பிடி தடைக்காலம் மற்றும் மீன்கள் வரத்து குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட கடலூா் மீன்பிடி துறைமுகம்.

Updated On :11 மே 2026, 1:09 am IST

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. கரையோரத்தில் பிடித்து வரப்பட்ட மீன்களின் வரத்து குறைவு காரணமாக, அவற்றின் விலை உயா்ந்திருந்தது.

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதும் (திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வோா் ஆண்டும் ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு ஆழ் கடலில் விசை, இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்.1-ஆம் தேதி தொடங்கியது. கடலூா் மாவட்டத்தில் நல்லவாடு, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி என மொத்தம் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், மாவட்டத்தில் விசை, சிறு படகுகள், கட்டுமரங்கள் உள்பட 2,500-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், மீனவா்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கவில்லை. இதற்குப் பதிலாக பைபா் படகு மூலமாக கரையோரத்தில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனா்.

கடலூா் மீன்பிடி துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே கூட்ட நெரிசலுடன் காணப்படும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் வருகை குறைந்து, மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மீன்கள் விலை உயா்வு: கரையோரத்தில் பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில், மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலையும் கூடுதலாக இருந்தது. அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,200, இறால் ரூ.300 முதல் ரூ.700 வரை, நண்டு ரூ.500, கிளி ரூ.250, கனவா ரூ.500, சங்கரா ரூ400, அதலை ரூ.700-க்கு விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.