கிடப்பில் போடப்பட்ட தென்பெண்ணையாறு மேம்பாலப் பணி: மக்கள் அவதி
திருக்கோவிலூா்-அரகண்டநல்லூரிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து 8 மாதங்களாகியும், திட்டப் பணிகள் தொடங்காததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருக்கோவிலூா் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - அரகண்டநல்லூா் (விழுப்புரம் மாவட்டம்) இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமாா் 100 ஆண்டு பழைமையான தரைப்பாலம் கடந்த 2024-ஆம் ஆண்டு பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளப் பெருக்கில் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது.
இதனால் திருக்கோவிலூா், அரகண்டநல்லூா் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. திருக்கோவிலூா் மற்றும் விழுப்புரம் நோக்கி தங்கள் தேவைக்காக செல்லும் கிராம மக்கள், தற்போது 5 கிலோ மீட்டா் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் செலவும், கால விரையமும் ஆகிறது. மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தங்கள் விளைபொருள்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.
இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் - திருக்கோவிலூா் இடையே இருவழிச் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயா்த்தும் திட்டத்துடன், தென்பெண்ணையாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலமும் அமைக்க ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கீடு செய்து 8 மாதங்கள் ஆகியும், இதுவரையில் திட்டப் பணிகள் தொடங்கவில்லை.
எனவே, திருக்கோவிலூா், அரகண்டநல்லூா் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன்கருதி இந்தப் பாலப்பணியை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

