அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை முடிக்கக் கோரி போராட்டம்

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும்,  அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து,  புதுச்சேரி
Updated on
1 min read

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும்,  அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து,  புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் உள்ள ரயில்வே கேட் ரயில் செல்வதற்காக மூடும் நேரங்களில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.  இதையடுத்து அங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  அப்போது, 2014-ஆம் ஆண்டே கட்டி முடித்து திறக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
 ஆனால் 5 ஆண்டுகள் ஆன பிறகும் மேம்பாலம் கட்டி முடிக்கப்படவில்லை.  இதனால் ரயில்வே கேட் இருக்கும்போது அடைந்த சிரமத்தைவிட,  பொதுமக்கள் கூடுதலாக சிரமம் அடைந்து வருகின்றனர். 
ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படாததற்கு மேம்பாலத்துக்கு 4 தூண்கள் அமைக்க வேண்டிய இடம் நான்கு தனியார் நபர்களிடம் உள்ளன.  அதை கையகப்படுத்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.  
மேம்பாலம் கட்டி முடிக்கப்படாததால் பொதுமக்களும், ஆம்புலன்ஸில் செல்லும் நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைக் கண்டித்தும், உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி மேம்பாலப் பணியை முடிக்க வலியுறுத்தியும் புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி சார்பில், அரும்பார்த்தபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் ஜெனோவியா,  சந்தானகிருஷ்ணன்,  ராஜதுரை, சுந்தர் ராஜ்,  சத்யா, வேலு,  பன்னீர்செல்வம், பிரகதீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
 கட்சித் தலைவர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
 மேம்பால தூண்கள் அமைக்க உள்ள இடத்தின் நான்கு  உரிமையாளர்களும் அரசிடம் நஷ்டஈடு பெற்றுக்கொண்டு காலி செய்யத் தயாராக இருக்கின்றனர். அரசின் மதிப்பீட்டு விலைக்கே இடத்தைக் கொடுக்க தயாராக உள்ளனர்.
அதற்கு ரூ.4 கோடி மட்டுமே செலவு ஆகும் எனக் கூறப்படுகிறது. 
ஆனாலும், அந்த இடத்தை கைப்பற்றி தூண்களை அமைத்து, பாலம் கட்டுமானப் பணியை முடிக்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com