காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி, இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் குழுவுக்கு புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் தமிழகம், புதுவையில் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யத்தில் இருந்து இந்தப் பேரணி கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது.
தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களுக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு நகரங்களை கடந்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழுவினர் வந்தனர்.
புதுச்சேரி-கடலூர் சாலையில் புதிய நீதிமன்றம் அருகே குழுவினருக்கு புதுச்சேரி விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், இந்தக் குழுவினர் கடலூருக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்னையில் பிரதமர் மோடி திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணித்து வருகிறார். பிரதமரை சந்திக்க புதுவை, கேரள முதல்வர்கள் தயாராக இருந்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று தெரியவில்லை. இது குறித்து முதல்வர் பழனிச்சாமி மக்களிடம் விளக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தி வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.