பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்பட 347 பேர் கைது

புதுவை சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்பட 347 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

புதுவை சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்பட 347 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய உள்துறை நியமனம் செய்த பாஜகவைச் சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக 4.7.2017-இல் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனம் செல்லாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்ட நிலையில், பேரவைக்குள் இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை.
நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் நியமனம் செல்லும் என கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், மார்ச் 26-ஆம் தேதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க 3 
நியமன எம்எல்ஏக்களையும் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, பேரவைத் தலைவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தங்களை அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி மற்றும் பாஜகவினர் கருப்புக் கொடி ஏந்தி, கடலூர் சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி வந்தனர்.
அவர்களை அண்ணா சாலை அருகே தடுப்புகளை அமைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் பேரவைத் தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார், அவர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 97 பெண்கள் உள்பட 347 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், மாநில பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏமான சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கூட அரசு மதிக்கவில்லை. பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி, பேரணியாக வந்த எங்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுவை சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. புதுவை அரசு எல்லா திட்டங்களுக்கும் தடையாக உள்ளது. புதுவையில் கொலை, கொள்ளை, ஏடிஎம் மோசடி என பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்தும், சட்டப்பேரவையில் எங்களை அனுமதிக்காதது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்வோம் என்றார் சாமிநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com