6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சாகர் மாலா திட்டத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: முதல்வர் 

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தால், மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

Updated On :21 மே 2018, 3:00 am

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தால், மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
புதுச்சேரி துறைமுகத்தை சாகர் மாலா  திட்டத்தின் மூலம் தூர்வார ஏற்கெனவே  மத்திய அரசு ரூ. 44 கோடி ஒதுக்கியது. 
தற்போது துறைமுகத்தில் கப்பல்கள் தங்கிச் செல்வதற்காக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுதில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த போது, இந்தத் திட்டத்துக்காக மேலும் ரூ. 85 கோடியை ஒதுக்குவதாக அவர் உறுதியளித்தார்.
இந்த நிதியில் மேலும் ஒரு கப்பல் தங்கும் மையம் கட்டப்படும். சாகர் மாலா திட்டத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, கூடுதல் நன்மை கிடைக்கும். 
தூர்ந்து போகும் மணலை அள்ளினால்தான் மீனவர்களின்  படகுகளும் கடலுக்குள் செல்ல முடியும்.
புதுச்சேரியில் மணல் தட்டுப்பாடு இருப்பதால், தூர்வாரும் மணலில் கடற்கரை உருவாக்கத்துக்குப் போக, மீதியுள்ளதை கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தலாம்.
தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ஏற்கெனவே முதல்வராக இருந்த போது, மத்திய  உணவுக் கழகத்திடம் ஒற்றை அவியல் அரிசி பெற்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள  மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதுபோல, தற்போதும் அரிசியைப் பெறுவதற்காக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை சந்தித்து பேசினோம். அவரும் அரிசி வழங்குவதாக உறுதியளித்தார். இலவச அரிசி வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
பாஜகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று கூறினர். ஆனால், தங்களது வாக்குறுதியை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் போலி ஏடிஎம்  அட்டை மூலம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ளனர்.  2 பேர் தலைமறைவாக உள்ளனர். 
இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் 3 பிரிவாகக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரே சிறப்பாக கையாண்டு வருவதால், சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார் முதல்வர் நாராயணசாமி.

"அரசியலில் இதெல்லாம் சகஜம்'
முதல்வர் நாராயணசாமியுடனான பேட்டியின் போது, கர்நாடகா மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளதே என செய்தியாளர்கள் கேட்டனர். 
அதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, இது அரசியல் ரீதியாக கட்சிகள் எடுக்கும் முடிவு. காங்கிரஸ் கொடுக்கிறது; மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றுக் கொள்கிறது. பிகாரில்கூட அதிக இடம் பெற்ற லாலு,  நிதீஷ்குமாரிடம் முதல்வர் பதவியைக் கொடுத்தாரே. அரசியலில் இதெல்லாம் சகஜம் என நகைச்சுவையுடன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.