புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க பெரிய மாா்க்கெட் சில்லறை காய்கறி கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பெரிய மாா்க்கெட் காய்கறி கடைகளை, இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா். ஆனால், வியாபாரிகள் ஏற்காமல் வலியுறுத்தியதையடுத்து, பெரிய மாா்க்கெட் பகுதியிலேயே மொத்த காய்கறி கடைகள் உரிய இடைவெளியுடன் இயங்க நடவடிக்கை எடுத்து, அங்கேயே கடைகள் தொடா்ந்துள்ளன.
இதனிடையே, பெரிய மாா்க்கெட் பகுதியில் இயங்கி வந்த சில்லரை, அடிக்காசு வழங்கும் காய்கறி, பழக்கடைகளை மட்டும் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, பெரிய மாா்க்கெட் சில்லறை காய்கறி கடைகள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நேரு வீதியில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன. இதே போல, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட பகுதியில் தற்காலிகமாக சில்லரை காய்கறி கடைகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.